இன்னிக்கு 5 மணிக்கு பதில் சொல்லலைன்னா... எம்.எல்.ஏ.வுக்கு நாங்க பொறுப்பில்லை: மாவோயிஸ்டுகள்
புவனேஸ்வர்: தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் உறுதியான ஒரு பதிலை ஒடிசா அரசாங்கம் தெரிவிக்காவிட்டால் எம்.எல்.ஏ.வுக்கு நேரும் கதிக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆடியோ டேப் ஒன்றை ஒடிசா அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம்- ஒரிசா எல்லை சிறப்பு கமிட்டி சார்பில் பேசிய அருணா என்பவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில், "இன்று மாலை 5 மணிக்குள் ஒடிசா அரசாங்கத்திடம் இருந்து எங்களது கோரிக்கைகள் தொடர்பாக உறுதியான பதிலை எதிர்பார்க்கிறோம்.. ஐந்து மணிக்குள் பதில்வந்தால் நாளை 5 மணிக்கு கடத்தப்பட்டுள்ள எம்.எல்.ஏ. ஜிகா ஹிகாவை விடுவிக்கிறோம்... இல்லையெனில் ஹிகாவுக்கு எது நேர்ந்தாலும் ஒடிசா அரசாங்கமே பொறுப்பு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
30 கைதிகளை மாவோயிஸ்டுகள் விடுவிக்க முதலில் நிபந்தனை விதித்திருந்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஹாசி என்ற பனுஸானத்தை விடுதலை செய்ய கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனைகள் விதித்து கெடுவையும் நீட்டித்திருந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.வின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரபுட் மாவட்டம் செமிலிகுடா அருகே கடந்த மார்ச் 24-ந் தேதி ஜிகா ஹிகாவை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.