மாப்பிள்ளை பிடிக்கலை...தாலிகட்டும் நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப் பெண்
வாலாஜா: வாலாஜா அருகே தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மணந்தாங்கல் பெல்லியப்பா நகரை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகன் மாதவன்(28) இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசல்ராமன் மகள் ஜெயசுதாவுக்கும் திருமணம் பேசி இருவீட்டாரும் நிச்சயம் செய்தனர்.
அவர்கள் இருவருக்கும் திங்கட்கிழமையன்று வாலாஜாவில் உள்ள கோட்டாராம செட்டி மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஞாயிறுக்கிழமை இரவு மாப்பிள்ளை அழைப்பும் மண விருந்தும் நடைபெற்று முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை முகூர்த்த நேரத்தின் போது தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என மணமகள் ஜெயசுதா கூறினார். இதனால் இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். திருமண மண்டபத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயசுதாவிடம் அவரின் பெற்றோர்களும், உறவினர்கள் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினர். அப்போதும் அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஜெயசுதா திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
உடனே அருகில் இருந்த போலீஸ் நிலையம் சென்ற ஜெயசுதா தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன் என முறையிட்டார். இதுகுறித்து போலீசார் மணமகளின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மணமகன் வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமரசம் பேசியும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள ஜெயசுதா மறுத்துவிட்டார். இதனால் திருமணம் நின்று போனது. அது பற்றிய தகவல் மண்டபத்திலும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், சுற்றத்தாரும் மண்டபத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
ராகுகாலம் காரணமா?
திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிவரைதான் முகூர்த்த நேரமாகும். ஆனால் திருமண அழைப்பிதழில் திருமண நேரம் காலை 7.30 முதல் 9 மணிக்குள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இது ராகுகால நேரம் ஆகும்.
இதுதான் திருமணம் நின்று போக காரணம் என்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பேசிக்கொண்டனர். எது எப்படியோ முதல்நாள்வரை சந்தோசமாக இருந்த மணப்பெண் தாலி கட்டும் நேரத்தில் முரண்டு பிடித்தது இரு குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.