திமுகவில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமாவா?
மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக ஏற்பதில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒப்புதல் இல்லை. இதனால் அவரை ஸ்டாலின் ஒதுக்கியே வந்தார். இந் நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானார் ஆறுமுகம்.
இந் நிலையில், கடந்த மாதம் சேலம் மாவட்ட இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை விஷயத்தில் ஆறுமுகத்துக்கும் ஸ்டாலினுக்கும் இடையே மோதல் எழுந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் சேலம் மாவட்ட திமுக இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வீரபாண்டி ஆறுமுகம் பரிந்துரை செய்த பலரது பெயர் இல்லை.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் திமுகவில் இருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக சேலத்தில் பரபரப்பு கிளம்பியது.
ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். சேலம் மாவட்ட திமுக இளைஞரணிக்கு புதியதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் தன்னிடம் வந்து வாழ்த்துப் பெற்று செல்வதாகவும், யாரோ சிலர் வேண்டும் என்றே நான் ராஜினாமா செய்து விட்டதாக புரளி கிளப்புகிறார்கள் என்றும் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.