2,12,000 கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் பழனியப்பன் அறிவிப்பு
சென்னை: 2012-2013ம் கல்வி ஆண்டில் 2 லட்சத்து 12,000 கல்லூரி மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் (லேப்-டாப்) வழங்கும் திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 34 ஆயிரம் லேப்-டாப் இந்த மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்.
2012-13ம் ஆண்டில் 2 லட்சத்து 12,000 மடிக்கணினிகள் மீதமுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு அறிவியல் கண்காட்சி, பொது விரிவுரைகள், குழு விவாதம், அறிவியல் செயல் முறைகள், அறிவியல் போட்டிகள் இவற்றை உள்ளடக்கிய சென்னை அறிவியல் விழா ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும்.
மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளி தொழில் நுட்ப கண்காட்சி கூடம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது இந்த ஆண்டு 10 அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications