பெரிதாகும் ஸ்டாலின், அழகிரி பிரச்சனை: அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்

கடந்த 15ம் தேதி மதுரையில் திமுக இளைஞர் அணி நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பிறகு மின் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் முக அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் கடுப்பான ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால் தான் கட்சி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கையொப்பமுள்ள அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் கழகத்தின் அறிவிப்பின்படி இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மதுரை மாநகரிலும் இந்த நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நேர்காணல் கடந்த 15ம் தேதி மதுரை பி.டி.ஆர்.மகாலில் நடந்தது.
அதே தினத்தில் கழகத்தின் அறிவிப்பின்படி, மாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி, நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த சில இளைஞர்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கே விடாமல் தடுத்து இருக்கிறீர்கள்.
இது கழக கட்டுப்பாடுகளை மீறிய செயலாகும். ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாக தலைமைக்கழகம் கருதுகிறது. எனவே இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், கூடுதல் துணைச் செயலாளர் சிவக்குமார், திமுக பகுதி கழக செயலாளர்கள் பொன். சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், ரவீந்திரன், பாண்டியராஜன், முருகன், முபாரக்மந்திரி, ராமலிங்கம் ஆகியோருக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மின் கட்டண உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் குறித்து முக அழகிரியிடம் கருத்து கேட்கவில்லையாம். இதனால் தான் அவர் நேர்காணல் மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக அழகிரியின் ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால் அவர் கோபித்துக்கொள்வார் என்பதற்காக இரு தரப்பினரிடமும் விசாரிக்குமாறு டி.கே.எஸ்.இளங்கோவனிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதன்படி அவர் விசாரணை நடத்தி இரு தரப்பிலும் தப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும் ஸ்டாலின் தனது நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாததால் மதுரை நிர்வாககிகளுக்கு நோ்ட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications