சாதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததால் பெரியார் தி.க.வினர் மீது தாக்குதல்
உசிலம்பட்டி: சாதி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருந்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந் தேதி முதல் பரமக்குடி இம்மானுவேல்சேகரன் நினைவிடத்தில் இருந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.
"ஊர்-சேரி" என்ற அவலம் இன்னமும் நீடிக்கும் நிலையில் சாதித் தமிழனைத் தமிழனாக்குவோம்" என்ற முழக்கத்தோடு இந்த பிரச்சரப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயணம் செக்கானூரணி, சோழவந்தான் வழியாக நேற்று வந்தடைந்தது.
உசிலம்பட்டியில் பெரியார் தி.க.வினரில் சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். மற்றொரு குழு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. பிரச்சார வாகனத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்களும் கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்டத்தை நோக்கி படுவேகமாக கற்கள் சராமரியாக வீசப்பட்டன.
இதில் பிரச்சாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உசிலம்பட்டியைச் சேர்ந்தவருமான இராவணன் படுகாயமடைந்தார். அவரது கை மணிக்கட்டு எலும்பு உடைந்தது. வலியால் துடித்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனே கூட்டத்தை நிறுத்த காவல்துறை உத்தரவிட்டது. ஆனால், அதையும் மீறி கூட்டம் நடைபெற்றது.
இந்த தாக்குதலுக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications