ராஜபக்சேவை திடீரென சந்தித்த சுஷ்மா சுவராஜ்- 'பிரேக்பாஸ்ட்' சாப்பிட்டபடி பேச்சு!
கொழும்பு: இந்திய எம்.பி்க்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ள நிலையில் இன்று காலை குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் தனியாக போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே. இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்துடன் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பிக்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் நாளைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இன்று மாலை இந்தியக் குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கு ராஜபக்சே காலை உணவு அளித்து கெளரவித்துள்ளார். இருவரும் சாப்பிட்டபடியே பேசியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பந்துல்ல ஜெயசேகரா கூறுகையில், இந்தியத் தூதர் அசோக் காந்தாவும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்கள் தவிர இலங்கை அமைச்சர்கள் பெரீஸ், லலித வீரதுங்கா ஆகியோரும் உடன் இருந்தனர் என்றார்.
சக இந்தியக் குழுவினரைத் தவிர்த்து விட்டு சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சவை பார்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications