அப்பாவை பிரின்சிபல் விசாரித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை: ஆண்டு இறுதித் தேர்வில் சக மாணவிக்கு விடைத்தாளை கொடுத்த மாணவியை ஆசிரியை கண்டித்ததால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால். வேன் டிரைவர். அவருடைய மகள் கவிதா (14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் இறுதி ஆண்டுத் தேர்வு நடந்து வந்தது. நேற்று முன்தினம் கவிதா சமூக அறிவியல் தேர்வு எழுதினார். அப்போது தனக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவிக்கு அவர் தனது விடைத்தாளைக் கொடுத்தததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஆசிரியை கவிதாவை கண்டித்ததோடு இது குறித்து தலைமை ஆசிரியரிடமும் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று தலைமை ஆசிரியர் கவிதாவின் தந்தையை பள்ளிக்கு அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் கவிதாவை பெயிலாக்கிவிடுவோம் என்று அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று தான் கடைசி தேர்வு நடந்து முடிந்தது. தேர்வை முடித்துவிட்டு வீட்டில் இருந்த கவிதா தனது தந்தையை தலைமை ஆசிரியர் அழைத்து விசாரித்தது குறித்து அறிந்து மனமுடைந்தார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கவிதா மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை வைத்தார். உடல் எரிய ஆரம்பித்தவுடன் அவர் அலறினார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications