கொளுத்தும் வெயில்: குமரியை மிரட்டும் அம்மை நோய்
கன்னியாகுமரி: கோடை வெயிலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது.
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கத்தை விட கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. ஆங்காங்கே ஆலங்கட்டி மழை பெய்தாலும் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
வெப்பத்தால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வைரஸ் நோயான அம்மை நோய் பலரை தாக்கி வருகின்றது. காய்ச்சல், உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் அம்மை நோய் தொடங்குகிறது. நோய் தாக்கியவர்கள் சுமார் ஒரு மாத காலம் வரை வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அருமனை, வெள்ளாங்கோடு, காரோடு, பனச்சமூடு, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடற்கரை கிராமங்களிலும் இந்த நோய் ஏராளமானோரை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அம்மை நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிக்ச்சை பெறத் தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications