'கொல்லைப்புறமாக' சட்ட திருத்தம் கொண்டு வரும் ப.சிதம்பரம்: நிறுத்தி வைக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்

இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 16ம் தேதி டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாடு நம்பிக்கையுடன் முடிவடைந்தது. மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும் பொது அமைதி மற்றும் போலீஸ் துறையில் மத்திய அரசு தலையிடும் வகையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் உறுதி அளித்தது. அதன்படி, மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மாநில அரசுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
முதல்வர்கள் தெரிவித்த கருத்துக்கள் மீது அர்த்தமுள்ள ஆலோசனைகள் நடத்தி, முரண்பாடில்லாத நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்த மாநாட்டின் பின்னணியில் எல்லைப் பாதுகாப்பு சட்டம் 1968ல் திருத்தங்கள் கொண்டு வர இருப்பது குறித்து நான் எடுத்துரைக்க விரும்புகிறேன். முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நாளில் இந்த அம்சம் துணை நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம் பெற்றது. எனவே அந்த மாநாட்டில் இந்தப் பிரச்சனை குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க இயலவில்லை.
எல்லைப் பாதுகாப்பு சட்ட திருத்தத்தை துணை நிகழ்ச்சி நிரல் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட முறையை ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சனையை முதலமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 29ம் தேதி ராஜ்யசபா உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தினார்கள். அதிலிருந்து இரண்டு வார கால அவகாசம் இருந்தும் இந்த அம்சத்தை துணை நிகழ்ச்சி நிரலில் உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது என்னை வியப்படையச் செய்துள்ளது.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மூலம் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் விரும்பியதோ அதை கொல்லைப்புற வழியாக எல்லைப் பாதுகாப்பு படை சட்டத்தின் மூலம் உள்துறை அமைச்சகம் கொண்டு வந்திருக்கிறது.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு தனியாக முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும என்ற எனது வேண்டுகோளை ஏற்று அடுத்த மாதம் 5ம் தேதி முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டுமாறு உள்துறை அமைச்சருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லை பாதுகாப்பு படை சட்ட திருத்தமும் இத்தகைய நோக்கத்தை கொண்டு இருப்பதால் அந்தக் கூட்டத்திலேயே இப் பிரச்சனை குறித்து விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும். முதலமைச்சர்கள் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும் வரை ராஜ்யசபாவில் உள்ள இந்த மசோதா மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதுகுறித்து தங்களின் விரைவான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதே கோரிக்கையை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications