பஞ்சாயத்தை எதிர்த்து வழக்கு: மனுதாரர் மகளின் திருமணத்தை நடத்த விடாமல் சர்ச்சுக்கு பூட்டு!
நாகர்கோவில்: ஊர் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் மகள் திருமணத்தை நடத்தவிடாமல் மகக்ள் தேவலாயத்திற்கு பூட்டு போட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் நகரில் பரிசுத்த திருகுடும்ப தேவாலயம் உள்ளது. ஊர் நிர்வாகத்திற்கு எதிராக அதே பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அருள்தாஸ் மகளுக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்தை கார்மல் நகர் தேவாலயத்தில் வைத்து நடத்த அவர் ஏற்பாடு செய்தார். ஆனால் சர்ச்சில் திருமணம் நடத்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அருள்தாஸ் நாகர்கோவில் சப்-கலெக்டர் வெங்கடேஷிடம் புகார் கொடுத்தார். திருமணத்தை தேவாலயத்தில் நடத்த சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஊர் நிர்வாகம் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சப்-கலெக்டர் உத்தரவுப்படி தேவாலயத்தில் காலை திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனால் ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கார்மல் தேவாலயம் முன்பு அதிகாலையில் திரண்டனர். இதையடுத்து தாசில்தார் ராமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்ததும் மக்கள் தேவாலய கதவை பூட்டி பூட்டு போட்டனர்.
திருமணத்திற்காக மணமக்களின் உறவினர்கள் தேவாலயத்திற்கு வரத் தொடங்கினர். இதையடுத்து பதட்டத்தை தவிர்க்க போராட்டம் நடத்திய பெண்கள், இளைஞர்கள் என சுமார் 30 பேரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் தேவாலய கதவின் பூட்டை உடைத்து அனைவரும் உள்ளே சென்றனர்.
ஆலய பாதிரியார் பீட்டர் ரெமிஜூயூஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை முன்னிட்டு தேவாலய வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications