விஜயகாந்த் அஞ்சாத நெஞ்சம் உடையவர் என்றால் ஏன் சட்டசபைக்கு வரவில்லை?: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தேமுதிக தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான விஜயகாந்த் சட்டசபைக்கு வராதது ஏன் என்பது குறித்து அமைச்சர்களுக்கும் தேமுதிக எம்எல்ஏக்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது நடந்த விவாதம்,
முத்துகுமார் (தேமுதிக): அஞ்சா நெஞ்சம் உடைய கேப்டனுக்கு நன்றி தெரிவித்து உரையை தொடங்குகிறேன்...
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (இடைமறித்து): இவரது கட்சி தலைவர் அஞ்சாத நெஞ்சம் உடையவர் என்றால் ஏன் சட்டசபைக்கு வரவில்லை.
இதற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர் ஜெயக்குமார்: அமைச்சர் உண்மையைத்தான் சொல்கிறார்.
சந்திரகுமார் (தேமுதிக): எங்கள் கட்சித் தலைவருக்கு விதிக்கப்பட்ட 10 நாள் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தீர்ப்பு இன்னும் வரவில்லை. சட்டசபையில் வழங்கப்பட்ட தண்டனையை ஏற்கவில்லை என்பதால்தான் நீதிமன்றம் சென்றிருக்கிறார். தீர்ப்பு வரும் வரை அது சாதகமோ, பாதகமோ அது பற்றி கவலையில்லை. தீர்ப்புக்கு பிறகுதான் சபைக்கு வருகிறார். எந்தவித அச்சமும் பயமும் எங்களுக்கு கிடையாது.
ஓ. பன்னீர்செல்வம்: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அப்போது நடந்து கொண்ட விதம் எப்படி என்றால், எங்கள் மதுரைப் பக்கம் நாக்கை துருத்தி கையை காட்டினால் 'கொன்னு புடுவேன்' என்று அர்த்தம். அதற்கு 10 நாள் தண்டனை ஏற்கனவே முடிந்து விட்டது. தீர்ப்பு வருவது வரட்டும். ஆனால் அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாமே.
சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கு நிலுவையில் இருந்து விட்டால் அவர் வராமலேயே இருந்து விடுவாரா?. மக்களுக்கு சேவை செய்ய தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துதான் வந்திருக்கிறோம். இவர் வரவில்லை என்றால் அந்த மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?
பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக.): இந்த விவகாரம் எங்கோ திசை திரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர் சபைக்கு வரவில்லை என்றால் பயந்து கொண்டு அல்ல. முன்னாள் முதல்வரும், இப்போதைய முதல்வரும் கூட விருப்பப்பட்ட போது சபைக்கு வந்து சென்றிருக்கின்றனர். எனவே வர வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் நிச்சயம் வருவார்.
அமைச்சர் கே.பி. முனுசாமி: அவர் இப்போதுதான் வர வேண்டும். முதல்வர் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிக்கிறார். அந்த திட்டங்களை எடுத்துச் சொல்ல, விவாதிக்க அவர் இப்போதுதானே வர வேண்டும்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: நான் கூட, ஒருநாள், 2 நாள் சட்டசபைக்கு வரவில்லை. அதற்காக பயந்து கொண்டு வரவில்லை. என்று அர்த்தமா?
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications