'மைக்ரோஸ்கோப்' சமுதாயத்தினர் எல்லாம் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர்: அன்புமணி
விழுப்புரம்: 1920ம் ஆண்டில் இருந்து இன்று வரை 27 முதலமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் கிடையாது. மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் கூட தமிழ்நாட்டை ஆண்டுள்ளார்கள் என்று பா.ம.க. இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம், இளம் பெண்கள் சங்கம், தமிழக மாணவர்கள் சங்கம், வன்னிய இளைஞர் படை என 4 அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் கரும்பு விவசாயிகள் சங்க சமூதாய கூடத்தில் நடந்தது.
அதில் பேசிய அன்புமணி, இந்த நிகழ்ச்சி வித்தியாசமான நிகழ்ச்சியாகும். நீங்கள் பதவியேற்கும் விழா நிகழ்ச்சியாகும். உங்களுக்கு டாக்டர் ராமதாஸ் பதவி கொடுத்துள்ளார். இன்று உங்கள் ஊரில் பதவி ஏற்கும் நீங்கள், நாளை உள்ளாட்சி பிரதிநிதிகளாகவோ, எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவோ, ஏன் மந்திரிகளாகக் கூட வர வாய்ப்புள்ளது.
டாக்டர் ராமதாஸ் இனி வரும் காலத்தில் திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
1920ம் ஆண்டில் இருந்து இன்று வரை 27 முதலமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் கிடையாது. மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் கூட தமிழ்நாட்டை ஆண்டுள்ளார்கள்.
திராவிட கட்சிகளின் சாதனை.. சாராயம், சினிமா, இலவசம்தான்.
கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் முதலமைச்சர்களாக உள்ளனர். கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இது போல நடந்ததா என்றார் அன்புமணி.