அரசு வக்கீல் வரவில்லை: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை 25க்கு தள்ளிவைப்பு
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சி சங்கரமட மேலாளரும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகியுமான சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சி.எஸ். முருகன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் தற்போது வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சங்கரராமனின் மனைவி பத்மா தனது மகன் ஆனந்த் சர்மாவுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். பத்மா நீதிபதியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 4 பேர் என்னை போனில் மிரட்டியதால் பிறழ் சாட்சி (பல்டி சாட்சி) அளித்தோம். எனவே என்னையும் மகன் ஆனந்த் சர்மா, மகள் உமா மைத்ரேயையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இன்று விசராணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே பத்மா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புதுவை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசராணை முடியும் வரை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை அவசர மனுவாக ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அதன் மீது இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இதற்கிடையே புதுவை நீதிமன்றத்தில் பத்மா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்காக சென்னை சென்றுவிட்டதாலும், மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகாததாலும் மனு மீதான விசாரணை மற்றும் வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்ப்டடுள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 7 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.