திருப்பூரில் இருதரப்பினரிடையே மோதல்- கதிரவன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்!
திருப்பூர்: திருப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார்வர்டு பிளாக் கட்சி கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அந்த கட்சி எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், திருப்பூரில் 25 இடங்களில் கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தது. திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பவானி நகர், கட்டபொம்மன் நகர் போன்ற பகுதிகளில் கொடியேற்று விழாவுக்காக கொடிக்கம்பம் நடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பவானி நகரில் கொடிக் கம்பம் வைக்க ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி கொடிக்கம்பம் நடப்பட்டது. இந்நிலையில் எம்.எல்.ஏ. கதிவரன் திருப்பூரில் பாப்பநாயக்கன் பாளையம் பவானிநகர் உள்ளிட்ட பல இடங்களில் கொடியேற்றிவிட்டுத் திரும்பியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பவானிநகர் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட பார்வார்டு பிளாக் தரப்பினருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பார்வார்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications