அலெக்ஸை விடுவிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. காலையில் லோக்சபா கூடியதும் தனி தெலுங்கானா மாநிலம் கோரி தெலுங்கானா எம்.பி.க்களும், இலங்கைத் தமிழர் விவகாரம் குறி்தது அதிமுக எம்.பி.க்களும், மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட சத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்கக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் தெலுங்கானா எம்.பி.க்கள் அவையை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் தெலுங்கானா எம்.பி.க்கள் தனி தெலுங்கானா மாநிலம் கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடு்தது அவையை நடத்தவிடாமல் தொந்தரவு கொடுத்ததற்காக 8 தெலுங்கானா எம்.பி.க்கள் 4 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முன்னதாக ராஜ்யசபாவிலும் தமிழக கலெக்டரை மீட்கக் கோரி தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.
மேனன் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்:
இந் நிலையில் அலெக்ஸ் பால் மேனனின் குடும்பத்தினரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னையில் உள்ள அலெக்ஸின் தந்தை வரதராஜ், மாமனார் வேணுகோபால் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த பதவிக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு சிறந்த அதிகாரியாக பணியாற்றி வருபவர். மாவோயிஸ்டுகள் அவரை விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.
கலெக்டரை விரைவாக மீட்க வேண்டி திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலெக்டரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூற கலைஞரின் சார்பிலும் திமுகபொருளாளர் என்ற முறையிலும் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் நேரில் வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் மனதில் இடம்பிடித்த சுக்மா மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது என்றார்.












Click it and Unblock the Notifications