கருணாநிதி, ஜெயலலிதா மட்டும் சட்டசபைக்கு வந்தாங்களாக்கும்?.. கேட்கிறார் விஜயகாந்த்
சேலம்: கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சட்டசபைக்கு வரவில்லை. ஆனால் தான் வராததை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி செம்மேட்டில் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட விஜயகாந்த் பேசியதாவது,
தேமுதிகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சட்டசபையில் தைரியமாக பேசி வருகின்றனர். அவர்களை பேச சொல்லிவிட்டு மக்களை நான் நேரில் வந்து சந்தித்து மனு வாங்கி வருகிறேன்.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தமிழக அரசால் முடியவில்லை. கோவையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற தேமுதிக தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். தமிழகத்தில் லாக்கப் மரணங்களும், கொலை, கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றது. உண்மையைச் சொன்னால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
குடும்ப ஆட்சி நடத்திய திமுகவிடம் இருந்து அதிமுக கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளோம். சுருக்கமாகச் சொன்னால் முன்பு குடும்ப ஆட்சி நடைபெற்றது. இப்போது ஒரு கும்பல் ஆட்சி நடைபெறுகின்றது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. அஙகு போதிய அளவு மருத்துவர்கள் கூட இல்லை. இதனால் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு 50 கோடி ரூபாயில் நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்து தேமுதிகவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன்.
இன்றைய முதல்வராக உள்ள ஜெயலலிதா தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சட்டசபைக்கு வரவில்லை. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வரவில்லை. ஆனால் நான் போகாததை மட்டும் பெரிதுபடுத்துகின்றனர். சட்டசபையும் மக்கள் சபையும் ஒன்று தான் என்பதாலேயே உங்களைத் தேடி வந்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications