கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்தம்- தென் தமிழகத்தில் நல்ல மழை
சென்னை: கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது தீவிரமடைந்து வருவதால் தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது...
குமரி பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தீவிரமடைந்திருப்பதால் தென் தமிழகம், வடக்கு உட்புற கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் தென் பகுதியில் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
மதுரை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இந்த மழையானது அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கக் கூடும்.
தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளிலும் கேரளாவின் சில இடங்களிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் லேசான மழை இருக்கும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 8 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல ராஜபாளையம், கொளச்சல், இரணியல், ஸ்ரீவில்லிபுத்தூர், முதுகுளத்தூர், கடலாடி, காங்கேயம், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
மதுரையில் நேற்று பிற்பகலில் கன மழை பெய்து மக்களை குஷிப்படுத்தியது. இரவு வரை லேசான மழை காணப்பட்டது.
சென்னையில்
சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம் பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது.












Click it and Unblock the Notifications