நாடாளுமன்றத்தைத் தாக்கிய போபர்ஸ் புயல்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ்காந்தி பணம் பெற்றதாக ஆவணங்கள் இல்லை என்று போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை விசாரித்த சுவீடன் காவல்துறை தலைவர் லின்டர்ஸ்டிரோம் தெரிவித்திருந்தார்.
இன்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியதும் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் முதலில் மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு போபர்ஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கைகள் மீண்டும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 12 மணிக்கு அவை கூடியபோது முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் போபர்ஸ் விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்பட்டது. இடதுசாரிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் அவையில் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையிலும் இதே விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பியிருந்தனர். இதனால் பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications