இந்தியாவின் முதல் 'உளவு பார்க்கும் செயற்கைக் கோள்' ரிசாட்-1: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ரிசாட்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்று அதிகாலை 5.47 மணிக்கு ரிசாட்-1 செலுத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இது மாபெரும் வெற்றி என்று பிரகடனம் செய்தார்.
அவர் கூறுகையில், பிஎஸ்எல்வி சி19 ராக்கெட் மூலம் இந்தியாவின் முதலாவது சுயேச்சையான ரேடார் இமேஜிங் சாட்டிலைட், அதாவது ரிசாட்-1 வெற்றிகரமாக சுற்றுப் பாதையில் விடப்பட்டது. இது இந்தியாவுக்குப் பெருமையான நேரமாகும் என்றார்.
மொத்தம் 1258 கிலோ எடை கொண்ட ரிசாட்-1 செயற்கைக் கோள், இரவிலும், பகலிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது. மேகக் கூட்டம் அதிகம் இருந்தாலும், பனிமூட்டம் அதிகம் இருந்தாலும் கூட துல்லியமாக தனது இலக்கைப் படம் பிடிக்க முடியும்.
செயற்கைக் கோளை வடிவமைக்க மற்றும் செலுத்த மொத்தம் ரூ. 500 கோடி செலவாகியுள்ளது. இந்தியாவின் அதிக செலவுபிடித்த முதல் திட்டமும் இதுதான். வெள்ளம், புயல் போன்ற இயற்கைக் சீற்றங்களை கண்காணிக்க அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் இது என்றாலும் கூட உளவு செயற்கைக் கோளாக இது சர்வதேச பார்வையில் பார்க்கப்படுகிறது.
இந்தியா இதுவரை ஏவிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்ட செயற்கைக் கோள் இதுதான்.
தமிழகப் பெண் விஞ்ஞானி வளர்மதி
ரிசாட்-1 திட்ட இயக்குநராக செயல்பட்டவர் என்.வளர்மதி. ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் திட்டம் ஒன்றின் இயக்குநராக செயல்பட்ட முதல் பெண் இவர்தான். மேலும் இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் தமிழகத்திற்கும் பெருமை கூடுகிறது.
ஏற்கனவே ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியா 2009ம் ஆண்டிலேயே செலுத்தியுள்ளது. ஆனால் அது முற்றிலும் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது செலுத்தப்பட்டுள்ள ரிசாட்-1 முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களையும், கால நிலை மாற்றங்களையும் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டே, பாகிஸ்தான், சீனா போன்ற 'பக்கத்து வீடுகளில்' நடப்பதையும் இனிமேல் நம்மால் உளவு பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!.












Click it and Unblock the Notifications