போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதால் மணலியில் போலீஸ்காரர் லாரி ஏற்றி கொலை?
மணலி: சென்னை அருகே மணலியில் கண்டெய்னர் லாரி மோதி போலீஸ்காரர் சந்தன மாரியப்பன் இறந்து போன விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பலவும் திருவொற்றியூர்- மணலி சாலையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். பெரும்பாலும் வடமாநில் ஓட்டுநர்கள் லாரியை சாலையிலே நிறுத்தி ஓய்வெடுப்பர். ஒவ்வொரு நாளும் போக்குவரத்து போலீஸார் இவர்களை தட்டி எழுப்பி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர்.
மணலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் பிரேம் நிவாஸ், சந்தன மாரியப்பன் ஆகியோர் அடங்க டீம் நேற்று இரவும் வடமாநில லாரி ஓட்டுநர்களை தட்டி எழுப்பி போக்குவரத்தை சரி செய்தனர்.
அதன் பின்னர் மூவரும் சாத்தான்காடு காவல்நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். மூவருமே எதிர்பாராத வகையில் திடீரென வேகமாக தடுப்புகளை மோதித் தள்ளிவிட்டு வந்த வட மாநிலப் பதிவு எண் கொண்ட லாரி போலீசாரை நோக்கிப் பாய்ந்தது. இதில் லாரியின் அடியில் சந்தன மாரியப்பன் சிக்கிக் கொண்டார். சிறிது தொலைவு வரை அவர் இழுத்துச் செல்லப்பட அங்கேயே பலியாகிப் போனார். பிரேம் நிவாஸ் என்ற போலீஸ்காரரின் கால் முறிந்துபோனது. சப் இன்ஸ்பெக்டர் குமார் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
போலீசார் மீது மோதிய லாரியானது சாத்தான்காடு போலீஸ் நிலையத்தை ஒட்டிய சாலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அந்தப் பகுதியில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரி வேகமாக வந்தது போலீசாரைக் குறிவைத்ததுதானா? என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த சந்தன மாரியப்பனின் தந்தை விளாத்திகுளத்தில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். இவரது மூத்த சகோதரர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications