மூத்த காங். தலைவர் திவாரிக்கு மரபணு சோதனை: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோகித் சேகர் என்ற இளைஞர் என்.டி. திவாரிதான் தமது தந்தை என்று உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். திவாரியின் வீட்டில் பணிபுரிந்த உஜ்ஜைலா என்ற பெண் மூலம் தாம் பிறக்க நேரிட்டது என்றும் இதற்காக கூடுதல் ஆவணங்களாக ஏராளமான புகைப்படங்களையும் ரோகித் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இதை தொடர்ந்து என்.டி. திவாரி நிராகரித்து வந்தார்.
இந்த வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்த வழக்கில் மரபணு சோதனை நடத்துவதற்கும் உடன்படாமலேயே என்.டி. திவாரி இழுத்தடித்து வந்தார். மேலும் மரபணு சோதனை செய்ய யாரும் தம்மை கட்டாயப்படுத்தவும் முடியாது என்றும் திவாரி கூறியிருந்தார். ஒருகட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே அவரது ரத்த மாதிரி எடுத்து மரபு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திவாரி அப்போது ஆஜராகவில்லை.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மரபணு சோதனை நடத்த என்.டி.திவாரி தமது ரத்த மாதிரியை கொடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தேவைப்படுமேயானால் போலீசார் உதவியை ரோகித் நாடலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான என்.டி.திவாரி ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது பெண்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து மசாஜ் செய்த விவகாரத்தில் நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications