ஆட்சியர் அலெக்ஸை விடுவிக்க 17 பேரை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் நிபந்தனை!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் கடந்த சனிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார்.
அவரை விடுவிப்பது தொடர்பாக மாவோயிஸ்டுகள் பேராசிரியர் ஹர்கோபால் மற்றும் பி.டி.சர்மா தங்கள் தரப்பு பிரதிநிதிகளாக நியமித்திருந்தனர். சத்தீஸ்கர் மாநில அரசு நிர்மலா புச் மற்றும் எஸ்.கே. சர்மா ஆகியோரை நியமித்திருந்தது. இருதரப்பும் நேற்று முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று காலை 9 மணிக்கு ராய்ப்பூரில் நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் முதலில் முன்வைத்திருந்த 8 பேரை விடுதலை செய்ய வேண்டும், பசுமை வேட்டை நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது தெரியவில்லை.
இதனிடையே மொத்தம் 17 பேரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளை விமர்சிக்கும் வகையில் ஆட்சியரைக் கடத்தும் போது சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாதுகாவலர்களின் குடும்பத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லையே என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று கடத்தப்பட்ட அலெக்ஸ்பால் மேனனுக்கான ஆஸ்துமா மருந்துகள் நேற்று பழங்குடி இனத் தலைவர் மணீஷ் குஞ்சம் மூலம் கொடுத்தனுப்பப்பட்டு இருந்தது. மருந்துகளைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்த மணீஷ் குஞ்சம், அலெக்ஸ்பாலை தாம் சந்திக்கவில்லை எனினும் அவர் நலமுடன் இருப்பதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications