மருத்துவக் கல்லூரி முறைகேடு: சிபிஐ குற்றச்சாட்டை மறுக்கிறார் அன்புமணி!

கடந்த 2004-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மத்திய சுகாதார மந்திரியாக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்தார். அப்போது, கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இன்டக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதில் முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அன்புமணி ராமதாஸ், அமைச்சரவை செயலகத்தின் டைரக்டர் கே.வி.எஸ்.ராவ், மத்திய சுகாதார அமைச்சக பிரிவு அதிகாரி சுதர்சன் குமார், இன்டக்ஸ் மருத்துவ கல்லூரி தலைவர் சுரேஷ் சிங் படோரியா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில், நீதிபதி தல்வந்த் சிங் முன்னிலையில் சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மாயங் நலச் சங்கம் என்ற அமைப்பு, இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடக்க திட்டமிட்டு அனுமதி கோரியது. 2007-2008 கல்வி ஆண்டில் அந்த அமைப்புக்கு மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஓராண்டுக்கு மட்டுமே அப்போதைய சுகாதார துறை மந்திரி அன்புமணி ராமதாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கினார். ஆனால் இரண்டாம் ஆண்டுக்கான அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்தன.
தேவையான வசதிகள் செய்யப்படாத நிலையில், தகுதியே இல்லாத அந்த கல்லூரிக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அன்புமணியும், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் ஒருவருடன் ஒருவர் இணைந்து சதி செய்துள்ளனர். இதனால் அந்த கல்லூரி பண ஆதாயம் அடைந்துள்ளது," என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "எனக்கு எதிராக கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. விதிமுறைகளின்படியே அனைத்தையும் செய்தேன். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் தவறு எதுவும் நடக்கவில்லை. சாதகமாகவும் நான் நடந்து கொள்ளவில்லை. குற்றமற்றவனாக வெளியே வருவேன். குற்றப்பத்திரிகையின் நகலை கூட இன்னும் நான் பார்க்கவில்லை," என்றார்.












Click it and Unblock the Notifications