மாவோயிஸ்டு பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் சத்தீஸ்கர் அமைச்சர்கள் குழுவும் பங்கேற்பு
ராய்ப்பூர்: கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனனை மீட்பது தொடர்பாக மாவோயிஸ்டுகள் பிரதிநிதிகளுக்கும் சத்தீஸ்கர் அரசு குழுவுக்கும் இடையே இன்று நடைபெற்ற 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். சுக்மா மாவட்டத்தை உள்ளடக்கிய பஸ்தார் வனப்பகுதியின் இயற்கை வளத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது, காவல்துறையின் அட்டூழியங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக அலெக்ஸ்பால் மேனனை கடத்தியதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் அலெக்ஸ்பால் மேனனை விடுவிக்க தங்களது இயக்கத்தின் 17 பேரை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர். அதேபோல் தங்களது பிரதிநிதிகளாக பி.டி.சர்மா மற்றும் பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோரையும் அவர்கள் நியமித்திருந்தனர்.
இதனால் சத்தீஸ்கர் மாநில அரசும் தங்கள் தரப்பில் ஒரு குழுவை நியமித்தது. இருதரப்பு குழுக்களும் ராய்ப்பூரில் 3 கட்ட பேச்சுகவார்த்தை நடத்தியது. அதன் பின்னர் வனப்பகுதிக்குச் சென்று மாவோயிஸ்டுகளுடன் அவர்களது பிரதிநிதிகள் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பினர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் இல்லத்தில் இன்று காலை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர். இன்றைய பேச்சுவார்த்தையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் அலெக்ஸ்பால் மேனன் விடுதலை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications