பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் மரணம் இல்லை: கருணாநிதி

இன்று டெசோ அமைப்பின் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,
கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சனையை தீவிரமாக கையில் எடுப்பதாக கூறுகிறார்களே?
பதில்: ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப் படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப் படை இந்தியா வந்தபோது அன்று முதலமைச்சராக இருந்த நான் வரவேற்கச் செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.
கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதைத் தடுக்க தவறிய நீங்கள் இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாக விமர்சிக்கிறார்களே?
பதில்: விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். நாங்கள் ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.
கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்?.
பதில்: முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.
கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
பதில்: போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.
கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?
பதில்: உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது திமுகவால் தான் என்பதை மறந்து விடக்கூடாது.
கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?
பதில்: அவர்களை ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.
கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி சொன்னாரா?
பதில்: என்னிடம் சொன்னார். ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார் (சிரிக்கிறார்)
கேள்வி: நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பதில்: நல்ல ஜனாதிபதி வர வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications