சிறுமி நரபலி வழக்கில் கைதான திமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்
மதுரை: மதுரையில் சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான அயூப்கான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தொத்தன் என்பவரின் இளைய மகள் ராஜலட்சுமி(5) நரபலி கொடுக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான அயூப்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை திமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் பி. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் ஆயூப்கான் என்பவர் சிறுமியை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனே அவரை நேரில் அழைத்து மாவட்ட செயலாளர் என்ற முறையில் விசாரித்தேன். அப்போது இந்த குற்றச்சாட்டை அயூப்கான் முற்றிலும் மறுத்தார்.
இருப்பினும் திமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான இந்த செயலை அவர் செய்யவில்லை என நிரூபித்து இதிலிருந்து விடுபடும் வரை அயூப்கானை திமுக நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை எனவும், அவரை அன்றாட நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைப்பது எனவும் மாவட்ட செயலாளர் என்ற முறையில் இந்த முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.