விளாத்திகுளத்தில் ஓடு்ம் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்
தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மலைமதி விஜயன். அவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே போல் காவல் நிலையத்தில் பணியாற்று்ம் ஒருவரது 16 வயது மகள் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வழக்கம் போல் மாணவி பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அதே பேருந்தில் வந்த மலைமதி விஜயன் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சல் போட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆத்திரமடைந்து மலைமதி விஜயனை கண்டித்தனர். ஆனால் அவர் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பேருந்தை விளாத்திகுளம் காவல் நிலையத்துக்கு விடுமாறு டிரைவரிடம் கூறினர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து பயணிகள் அனைவரும் விளாத்திகுளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி பொறுப்பு ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விஜயனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், அவர் இது போன்ற புகார்களில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.