நாடாளுமன்ற எம்.பிக்களில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் இருக்கின்றனர்: ராம்தேவ் சாடல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராம்தேவ், நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்களில் பலரும் கொள்ளைக்காரர்கள், கல்வி அறிவு அற்றவர்கள். கொலைகாரர்கள்தான். இருப்பினும் சில நல்ல உறுப்பினர்களும் அங்கே இருக்கின்றனர் அவர்களை மதிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜகதாம்பிகா பால் மற்றும் சமாஜ்வாதிக் கட்சியின் மோகன்சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்திய நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை சீர்குலைக்கும் கருத்துகள் இவை... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அவதூறு கருத்துகளைப் பரப்புகின்ற செயல்" என்பது ஜகதாம்பிகா பாலின் கருத்து. ராம்தேவ் ஒரு சந்நியாசியாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறார் மோகன்சிங்.
பாரதிய ஜானதாவின் எம்.பி. கீர்த்தி ஆசாத்தும், இப்படியெல்லாம் ராம்தேவ் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனாலும் தாம் கூறிய கருத்துகளில் எந்த மாறுபாடும் இல்லை...முன்பும் இதேபோல் கூறியிருக்கிறேன் என்றார் அவர். ஏற்கெனவே அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் இதே கருத்தைக் கூறியிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.