திருப்பூரில் கொடிக் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி 2 தேமுதிகவினர் பலி
திருப்பூர்: மே தினத்தை முன்னிட்டு திருப்பூரில் கொடிக்கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி தேமுதிகவினர் 2 பேர் பரிதாபாமக பலியானார்கள்.
திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துப்புதூரை சேர்ந்தவர் பிரபு (32). குமரன் கல்லூரி அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். குளத்துப்புதூர் பகுதி தேமுதிக கிளை பொருளாளராக இருந்தார். அவரது மனைவி ரஞ்சனி (27). அவர்களுக்கு ரம்யா (10), நீபாஸ்ரீ (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். அவரது காம்பவுண்டில் வசித்து வந்தவர் பழனிச்சாமி(30). தேமுதிக உறுப்பினர். அவரது மனைவி வெண்ணிலா.
மே தினத்தை முன்னிட்டு திருப்பூர் நகரம் முழுவதும் தேமுதிக சார்பில் கொடியேற்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து குளத்துப்புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிரபு, பழனிச்சாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் கனகராஜ் (40), திருமலைச்சாமி (32) ஆகியோர் பேருந்து நிறுத்தத்தில் கட்சி கொடிக்கம்பத்தை நட குழி தோண்டினர்.
குழியில் கம்பத்தை வைக்கும்போது அது மேலே சென்ற மின் வயரில் பட்டது. இதில் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அதைப் பிடித்திருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு, பழனிசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் கனகராஜ் மற்றும் திருமலைச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தேமுதிக சார்பில் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications