இலங்கையில் மசூதி இடிப்பு- சென்னை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 150 பேர் கைது
சென்னை: இலங்கை தமிழ் முஸ்லிம்களின் மசூதியை சிங்கள வெறியர்கள் இடித்ததைக் கண்டித்து சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை மசூதி
இலங்கை தம்புள்ளை நகரில் 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். ஏற்கெனவே இலங்கையில் தமிழர் பகுதிகளில் பண்பாட்டுச் சின்னங்கள், கோவில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை அழித்தும் சிதைத்தும் சேதப்படுத்தியும் வருகிற சிங்கள இனவெறியர்கள், தமிழ் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களையும் சிதைக்கத் தொடங்கியுள்ளனர்.
திருமா போராட்டம்
சிங்கள இனவெறியர்களின் இச்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் குவியத் தொடங்கினர். முற்பகல் 11.30 மணியளவில் தூதரகம் முன்பாக வந்து சேர்ந்த தொல். திருமாவளவன் தமது தொண்டர்களுடன் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றார். முற்றுகைப் பேரணியின் போது சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் அவர்களைக் காவல்துறையினர் சிறிது தொலைவில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். திருமாவளவன் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை தேசியக் கொடி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications