சித்திரைத் திருவிழா-கூத்தாண்டவர் கோவிலில் தாலியறுத்து, ஒப்பாரி வைத்து அரவாணிகள் விதவைக் கோலம்
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரவாணிகள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து, கூட்டமாக கூடி ஒப்பாரி வைத்து கதறியழுது விதவைக் கோலம் பூண்டனர்.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் பூசாரி கையால் அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டனர். அதன் பின்னர் இரவு முழுவதும் அரவாணிகள் கூட்டம் கூட்டமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உளுந்தூர்ப்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு தேரோட்டைத்தைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அரவாணிகள் தாலியறுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பிற்பகல் ஒன்றரை மணியளவில் நத்தம் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதை அரவான் களப்பலி நிகழ்ச்சி என்கிறார்கள்.
போர்க்களத்தில் அரவான் களப் பலி கொடுக்கப்படுவதாகவும், இதனால் அரவாணிகள் தங்களது தாலியை அறுத்து விதவைக் கோலம் பூணுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமைகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியின்போது அரவாணிகள் கழுத்திலிருந்த தாலியை கோவில் பூசாரிகள் அறுத்தார்கள். பின்னர் வளையல்களை உடைத்தெறிந்தார்கள். நெற்றிப் பொட்டை அழித்தார்கள். இதையடுத்து அரவாணிகள் கூட்டம் கூட்டமாக ஒப்பாரி வைத்துக் கதறியழுதது உருக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியுடன் அரவாணிகளின் திருவிழா முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அரவாணிகள் தத்தமது ஊர்களுக்கு மிகுந்த மன நிறைவுடன் புறப்பட்டு்ச சென்றதைக் காண முடிந்த்து.