அப்பா- மகன் மோதலால் உடையக் காத்திருக்கும் கேரள காங்கிரஸ் கட்சி (பி)
கொல்லம்: கேரள காங்கிரஸ்(பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் பிள்ளைக்கும் அவரது மகனும் அமைச்சருமான கணேஷ்குமாருக்கும் இடையேயான மோதலால் அந்த கட்சியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பாலகிருஷ்ணன் பிள்ளை கோருவதுபோல் ஒருபோதும் அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்று கணேஷ்குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
பாலகிருஷ்ணன் பிள்ளை
கேரள காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் பிள்ளை. இவரது கட்சி காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளது. கடந்த 1975ல் இருந்து அச்சுமேனன், கருணாகரன், ஈகே நாயனார், மற்றும் ஏகே அந்தோணி ஆகியோரின் அமைச்சரவையில் பாலகிருஷ்ணன் பிள்ளை அமைச்சராக இருந்துள்ளார். இடமழையார் நீர்மின் திட்ட ஊழல் வழக்கில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த சட்டபேரவை தேர்தலில் இவரால் போட்டியிட முடியவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய மகன் கணேஷ்குமார் பத்தானாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கேரள கூட்டணி அரசில் வனம் மற்றும் சினிமா அமைச்சராக கணேஷ் குமார் இருக்கிறார்.
அமைச்சர் பதவியால் அடிதடி
இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான பாலகிருஷ்ணபிள்ளைக்கு மீண்டும் அமைச்சராக விரும்பினார். இதனால் மகனை பதவி விலக அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் மகனோ அமைச்சர் பதவியை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம்பிடித்து வருகிறார். இதனால் மகனை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக அப்பா பாலகிருஷ்ணன் பிள்ளை மிரட்ட மகனோ தனிக்கட்சி தொடங்கிவிடுவேன் என எச்சரித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தமது ஆதரவாளர்களுடன் பத்தானாபுரத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் தனிக்கட்சிக்கானது அல்ல என்றும் நட்பு ரீதியானது என்றும் கணேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும் கேரள காங்கிரஸ்(பி) எப்போது வேண்டுமானாலும் பிளவுபட வாய்ப்பிருக்கிறது. மேலும் மகன் கணேஷ்குமாரின் துணிச்சலான நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவளித்து வருவதாகவும் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications