கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழகத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் கேரள அரசு தற்போது கூடங்குளம் விவகாரத்திலும் தமிழகத்துடன் மோதலைத் தொடங்குவதாகத் தெரிகிறது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக கேரள அரசும், பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தி்ல் 500 மெகாவாட் மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
மே 3ம் தேதி அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளாவில் மின்சார நிலைமை மோசமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடங்குளத்திலிருந்து அதிக அளவிலான மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்குவது குறித்து சிறப்பான முறையில் பரிசீலிக்க வேண்டும்.
கேரளாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரம் போதுமானதாக இல்லை. மாநிலத்தின் தேவையை தீர்க்கும் வகையில் இல்லை. எனவே கூடங்குளத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பிரிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது உற்பத்திப் பிரிவு அடுத்த சில மாதங்களில் இயங்கத் தொடங்கலாம்.
தற்போதைய திட்டப்படி இரண்டு மின் உலைகளும் இயங்கத் தொடங்கும்போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் கேரளாவுக்கு 500 மெகாவாட் வேண்டும் என்று உம்மன் சாண்டி கோரியிருப்பது தமிழகத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படும் கேரளாவின் மனப்பான்மையைக் காட்டுவதாக தெரிவதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications