கூலிப்படையை ஏவி ராமஜெயத்தை கொன்றாரா முக்கியப் பிரமுகர்?

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவரே கூலிப்படையை ஏவி ராமஜெயத்தை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த கூலிப்படைக்கு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகள் சிலர் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜாமீனில் விடுதலையான பிரபல ரவுடிகளைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறையில் இருந்தபோது அந்த ரவுடிகள் வெளியே இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பல காரியங்களை நடத்தியது தெரிய வந்துள்ளது.
குண்டர் சட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியன் தண்டனை காலம் முடிந்து அண்மையில் விடுதலையானது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து கூலிப்படை குறித்து போலீசார் விசாரித்தனர். ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படை அவரது மனைவி லதா, குளித்தலையைச் சேர்ந்த பெண் உறவினர் ஆகியோரிடம் கட்டை குரலில் பேசியதைப் போட்டுக் காட்டி அந்த குரல்கள் எந்தெந்த ரவுடிகளுக்கு சொந்தமானது என்று துருவித் துருவி விசாரித்தனர்.
அதில் செல்போன் பேச்சு மற்றும் கூலிப்படை குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு எடமலைப்பட்டிபுதுரில் லோடு ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இதற்கு முன்பு சுந்தரபாண்டியன் எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ்.நகரில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் முட்டை ரவி கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.
புல்லட் மனோகர் கொலை வழக்கில் சுந்தர பாண்டியன் பெயர் உள்ளது. புல்லட் மனோகரும் ராமஜெயத்தை போன்று கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதனால் தான் போலீசார் சுந்தரபாண்டியனை பிடித்து விசாரித்துள்ளனர்.
சுந்தரபாண்டியனுக்கு திருச்சி, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கொலை, கொள்ளைச் சம்பவங்களை செய்துவிட்டு மாணவர்களுடன் தங்கிக்கொள்வாராம். சேலம் ஆத்தூரில் உள்ள ஒரு கல்லூரி மாணவனை தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகள் மற்றும் அந்த மாணவரிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications