கண்ணகி கோவில் சித்ரா பெளர்ணமி விழா.. ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
கூடலூர்: தமிழக, கேரள எல்லைப்பகுதியில் உள்ள கண்ணகி கோட்டம் எனப்படும் கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரையை எரித்த கண்ணகி அதன் பின்னர் இந்த இடத்திற்கு வந்தாள். அங்கு, பாண்டிய மன்னனால் கொல்லப்பட்ட அவளுடைய கணவன் கோவலன் வானிலிருந்து தேரில் வந்து கண்ணகியை தன்னுடன் அழைத்துச் சென்றான் என்பது ஐதீகம். இதுகுறித்து சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டி கும்பிட்டு வந்தனர் மக்கள். ஆனால் காலப் போக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் இந்த இடம் சேதமாகி விட்டது. இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கும் கண்ணகி கோவில் தற்போது கேரளாவின் கட்டு்பபாட்டில் இருப்பதால் இங்கு வருவதற்கு கேரள வனத்துறையினர் அநியாயத்திற்குக் கெடுபிடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு கண்ணகி திருவிழா சித்ரா பெளர்ணமி தினத்தன்று விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி கண்ணகிக்கு பச்சை பட்டு உடுத்தி சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. துர்கையம்மன், சிவனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தலுடன் விழா தொடங்கப்பட்டது.
தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மற்றும் உயர் அதிகாரிகள் வந்து கண்ணகியை தரிசனம் செய்தனர். சென்னை, புதுச்சேரி உள்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள்.
வழக்கம் போல கேரள போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கெடுபிடிகள் இருக்கத்தான் செய்தது. இருப்பினும் பக்தர்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications