2ஜி: முதன்முறையாக ஜாமீன் கோரும் ஆ.ராசா.. பெகுராவுக்கு கிடைத்ததால் ஆர்வம்!

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் மிச்சம் இருப்பது ராசா மட்டுமே.
இந் நிலையில் பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ராசா. இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதன் மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
ராசா சிறையில் ஓராண்டைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications