கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 30 நாட்களில் மின் உற்பத்தி: மத்திய அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 30 நாட்களில் மின் உற்பத்தி துவங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறுகையில்,
அணு மின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் சர்வதேச அமைப்பு விரைவில் கூடங்குளம் வந்து பாதுகாப்பு அம்சங்களை பார்வையிடுகிறது. அதன் பின்னர் ஓரிரு நாட்களில் அணு உலைகளில் தொடர்ந்து 20 நாட்களுக்கு யுரேனியம் நிறப்பும் பணி நடக்கும்.
இதற்கான பூர்வாங்க பணிகளில் 2,000க்கும் அதிகமான விஞ்ஞானிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். எனவே, இன்னும் 30 நாட்களில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முழு பாதுகாப்புடன் மின் உற்பத்தி துவங்கும்.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவுமில்லை. ஆக மொத்ததம் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர்.
மத்திய அரசு வழங்கிய தானே நிவாரண நிதியைக் கூட ரங்கசாமி அரசு மக்களுக்கு முறையாக வழங்கவில்லை. மேலும் 2011-2012ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகையில் 43 சதவீதத்தை அரசு பயன்படுத்தவேயில்லை. இந்த அரசு செயல்படாத அரசாக உள்ளது.
சிறந்த முதல்வர் என்று மக்களிடம் மாயையை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த ரங்கசாமியின் முகத்திரை கிழிய ஆரம்பித்துள்ளது என்றார்.
என்.ஆர். காங்கிரஸை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
என்.ஆர். காங்கிரஸை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அதை ரங்கசாமியே செய்து கொண்டிருக்கிறார். புதுவை மக்களுக்கு இந்த அரசு மீதான நம்பிக்கை போய்விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications