ராமஜெயம் கொலை: நேரு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் திடீர் அதிரடி விசாரணை!!

நேருவின் தம்பி ராமஜெயம், மார்ச் 29ம் தேதி காலை வாக்கிங் போனபோது கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். கொலைதொடர்பாக ஏகப்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால் எந்த முக்கியத் துப்பும் கிடைக்கவில்லை.
ஏகப்பட்ட ரவுடிகள், கூலிப்படையினர், அதிமுக பெண் கவுன்சிலர் என பலரையும் விசாரித்துப் பார்த்து விட்டனர். ஆனால் எதுவும் கிடைப்பதாக இல்லை.
இந்த நிலையில் தற்போது போலீஸார் தங்களது விசாரணை பாணியை வழக்கமான ஸ்டைலுக்கு மாற்றியுள்ளதாக தெரிகிறது. ராமஜெயம் உடல் இருந்த பகுதியான பொன்னுரங்கபுரத்துக்குச் செல்லும் வழி, கும்பகோணத்தான் சாலை உள்ளிட்ட சாலைகளில் போலீஸார் திடீர் விசாரணையில் இறங்கினர். அந்தப் பகுதியில் கடை வைத்திருப்போர், போவோர் வருவோர் உள்பட பலரையும் பிடித்து சரமாரியாக விசாரித்தனர். இதில் சில உருப்படியான தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது நேரு குடும்பத்தினரையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் போலீஸார் கொண்டு வந்துள்ளனர். இதுவரை நேரு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என யாரையுமே போலீஸார் வழக்கமான பாணியில் விசாரிக்கவில்லை. மாறாக, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும்தான் விசாரித்திருந்தனர்.
ஆனால் தற்போது அவர்களையும் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக விமான நிலைய காவல் நிலையத்திற்கு அவர்களை வரவழைத்து விசாரித்து வந்தனர். தற்போது கண்டோண்மென்ட் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
நேரு குடும்பத்தினர் ராமஜெயம் கொலைக்குப் பிறகு பெருத்த அமைதி காத்து வருகின்றனர். பெண் விவகாரம் தொடர்பாகத்தான் ராமஜெயம் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானபோதும் கூட அவர்கள் அதை மறுக்கவோ, விளக்கவோ முன்வரவில்லை. மாறாக வரலாறு காணாத அமைதி காத்து வருகின்றனர். இந்த நிலையில் நேரு குடும்பத்தினரையும், உறவினர்களையும், ராமஜெயம் நண்பர்களையும் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications