முத்துக்குமரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி வழங்கி பிரசாரம் தொடங்குகிறார் ஜெ.

புதுக்கோட்டையில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் முத்துக்குமரன். இவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்ததால், அங்கு தற்போது இடைத் தேர்தல் வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தனது ஆதரவுடன் இங்கு சிபிஐயை வெற்றி பெற வைத்த அதிமுக இந்த முறை தானே நேரடியாக போட்டியிடுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. மேலும் திமுகவும் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் தேமுதிக மட்டும் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு திமுக, சிபிஎம் ஆகியவை ஆதரவு தரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதிமுகதான் முதன் முதலாக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமானை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியது. அதன் பிறகே தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக பிரமாண்ட தேர்தல் பணிக்குழுவை ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் தேர்தல் பணியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். கூடுதல் குழுவையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தற்போது தேமுதிக தேர்தல் களத்தில் குதித்துள்ளதால், ஜெயலலிதாவின் பிரசாரம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி முழுவதும் அவர் தீவிர சுற்றுப்பயணம் செய்வார் என்று தெரிகிறது. அதற்கேற்ப அதிமுக தரப்பில் திட்டமிட்டு வருகின்றனர்.
சட்டசபைக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருவதால் அமைச்சர்கள் இன்னும் தொகுதிக்கு முழுமையாக வர முடியில்லை. கூட்டம் முடிந்ததும் அத்தனை அமைச்சர்களும் புதுக்கோட்டையில் முகாமிடவுள்ளனர். மேலும் ஜெயலலிதாவும் பிரசாரம் செய்யவுள்ளார்.
எத்தனை நாட்கள் ஜெயலலிதா பிரசாரம் செய்வார், எங்கெங்கு போவார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் தொகுதி முழுவதையும் கவர் செய்யும் வகையில் அவரது பிரசாரம் இருக்கும் என்று தெரிகிறது.
முத்துக்குமரன் வீட்டுக்குச் சென்று அங்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கிய பின்னர் ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல தேமுதிக தரப்பிலும் வழக்கம் போல விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தீவிரப் பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications