போலீஸ் மீது செருப்பு வீசி நித்தியானந்தா ஆதரவாளர் தாக்குதல்!

மதுரை ஆதீனம் மடத்திற்குள் குண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக பரபரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளதால் ஆதீன மடம் அமைந்துள்ள பகுதி பெரும் பரபரப்புடனும், பதட்டத்துடனும் காணப்படுகிறது. பொதுமக்களும் ஆங்காங்கே திரண்டு நிற்பதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்படுகிறது.
மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் இன்று காலை மாநாடு நடத்தினர். இதையடுத்து அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று மாலை ஆதீன மடத்திற்குள் சென்று திருஞானசம்பந்தரைப் போற்றிப் பாடி வழிபாடு நடத்தச் சென்றனர். ஆனால் ஆதீன மட வாயில்களை நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மூடி விட்டனர்.
மேலும் மடத்திற்கு வந்த மதுரை ஆதீன மீட்புக் குழுவினரை அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் அவர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், மீட்புக் குவுவினரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் மடத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் மீது காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து வீசினார். இது ஒரு சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டது. இதனால் அவர் வெகுண்டார். போலீஸாரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அங்கு கூடிய நித்தியானந்தா ஆதரவாளர்கள் போலீஸாரை வேகமாக கீழே தள்ளி விட்டனர். பின்னர் செருப்பை வீசிய தங்களது ஆளை, வேகமாக உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.
இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து தற்போது ஆதீன மடத்தைச் சுற்றிலும் போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். கூடுதல் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மீட்புக் குழுவினர் கூறுகையில், மடத்துக்குள் நித்தியானந்தா ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தனர். இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்கு வெளியே பெரும் பரபரப்பு காணப்படுகிறது. பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் போலீஸார் வெகுண்டுள்ளனர். எனவே உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தால், ஆதீன மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரைப் போலீஸார் கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications