நெல்லை புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
நெல்லை: நெல்லையில் 100 ஏக்கரில் இந்த ஆண்டு துவங்கப்படும் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முலம் பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., பி.டெக். (உணவு தொழில்நுட்பம்), பி.டெக். (கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்), ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பி.வி.எஸ்.சி. படிப்பு தற்போது சென்னை, நாமக்கல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நெல்லையிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை ராமையன்பட்டியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிக்காக 100 ஏக்கர் இடமும், பண்ணை அமைப்பதற்காக 40 ஏக்கர் இடமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரியில் இந்த ஆண்டு 40 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. பொது பிரிவினர் ரூ.500ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300ம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். வரும் ஜூன் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 18ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications