கொள்கை பரப்புச் செயலாளராக ஆ.ராசா நீடிப்பார்: திமுக

2ஜி ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்ப்டடார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்கள் ஒவ்வொருவராக ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்கள். ஆனால் ராசா மட்டும் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார் பெகுராவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் அளித்ததையடுத்து தானும் ஜாமீன் கோரினார்.
அவருக்கு இன்று ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து 15 மாத காலத்திற்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலர் வரவேற்றனர்.
இது குறித்து திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்,
ஜாமீனில் வெளிவந்துள்ள ஆ.ராசாவுக்கு திமுக ஆதரவாக இருக்கும். அவர் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தொடர்ந்து நீட்டிப்பார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்வார் என்றார்.
இந்நிலையில் ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் 2ஜி ஊழல் வழக்கு வலுவிழந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications