6,000 பேருந்துகள் வாங்கும் போக்குவரத்துக் கழகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
ஊட்டி: மாநகராட்சிகளில் வழங்கப்படும் சீசன் பாஸ் திட்டம் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
ஊட்டி பேருந்து நிலையத்தை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு போக்குவரத்துக் கழகம் மக்களுக்கு சேவை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து டிரைவர்களை அதிக தூரம் பேருந்துகளை இயக்க அறிவுறுத்துவதாக இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இது குறித்து புகார் வந்தால் அந்தந்த கிளை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டு போக்குவரத்துக் கழகம் மூலம் 6,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகளுக்கான பாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பேருந்துகள் வந்தால் பழைய பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
இதுவரை மாநகராட்சிகளில் பேருந்து சீசன் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
தற்போதைய அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டண உயர்வால் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி பேருந்து கட்டணத்திற்கே சென்றுவிடுவதால் நகரப் பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.