கடும் 'பசியில்' மத்திய அரசு.. 'டயட்டில்' திமுக!: பிரதமர் விருந்துக்கு போகாத அழகிரி!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. பல ஊழல்கள், விலைவாசி உயர்வு என கடும் பிரச்சனைகளுக்கு இடையே 3 வருடத்தை ஓட்டியுள்ளது இந்த அரசு.
இப்போது ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை கூட முடிவு செய்ய முடியாத அளவுக்கு 'பலமிக்க' அரசாக விளங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வாரி விட்டு வருவதால், எத்தனை கட்சிகள் ஆதரித்தாலும் போதாது என்ற அளவுக்கு கடும் 'பசியில்' உள்ளது மத்திய அரசு.
இந் நிலையில் 3 ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டில் மத்திய அரசு காலடி எடுத்து வைப்பதையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விருந்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் கலந்து கொள்ளவில்லையாம். அவர் கூறுகையில், பிரதமர் அளிக்கும் விருந்துக்கு என்னை யாரும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை. ஆனால் விருந்தில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
ஆனால், நான் டயட்டில் இருப்பதால் பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications