மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கறுப்புப் பணம் தொடர்பான 97 பக்க வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.
கறுப்புப் பண வெள்ளை அறிக்கை
கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தவையும் நியமிக்கலாம், கறுப்புப் பணக்காரர்களை விசாரித்து தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவலாம், கிரெடிட் - டெபிட் கார்டுகள் மூலம் பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கலாம் என்பது உள்பட பல யோசனைகளை வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இதுவரை கறுப்புப் பணம் வைத்திருந்ததாக பிடிபட்டவர்கள் பற்றிய தகவல்களையோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குவிந்திருப்பதாகக் கருதப்படும் கறுப்புப்பணத்தின் அளவு எவ்வளவு என்பதையோ தெரிவிக்கவில்லை.
5 மசோதாக்கள்
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 5 மசோதாக்களை கொண்டுவரலாம் என்கிறது பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை.
லோக்பால் மசோதா, நீதித்துறையில் பொறுப்பேற்பைக் கொண்டுவரும் மசோதா, ஊழல்களை அரசின் கவனத்துக்கு ரகசியமாகக் கொண்டுவருவோரை ஊக்குவித்து காப்பாற்றும் மசோதா, குறைதீர்ப்பு மசோதா, அரசுக்குத் தேவைப்படுவனவற்றை உரிய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பகிரங்கமாகக் கொள்முதல் செய்யும் மசோதா ஆகியவைதான் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மசோதாக்களாகும்.
4 அம்ச உத்தி
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 4 அம்ச உத்திகளையும் பிரணாப்பின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.
வரிச்சட்டங்களைத் தாங்களாகவே நேர்மையாகக் கடைப்பிடிப்போருக்கு ஊக்குவிப்பு தரலாம், பொருளாதாரத்தின் முக்கியமான சில துறைகளில் சீர்திருத்தம் செய்யலாம், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்குக் கடுமையாக தண்டனை விதிப்பதன் மூலம் மற்றவர்களை எச்சரித்து வரி செலுத்த வைக்கலாம், ரியல் எஸ்டேட் என்று அழைக்கப்படும் வீடு, மனை, அடுக்ககம் ஆகியவற்றை விற்பனை செய்யும் துறையில் காணப்படும் ஒழுங்கற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்தி உண்மையான மதிப்புக்குப் பத்திரம் பதிவு செய்வதையும் அதற்கேற்ப வருமானத்தை நேர்மையாக அறிவித்து வரி செலுத்துவதையும் நடைமுறையாக்கிவிடலாம் என்பதுதான் அந்த 4 அம்ச உத்திகள்.
மேலும் நிதித்துறையிலும் ரியல் எஸ்டேட் துறையிலும் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளால் வரி ஏய்ப்பு செய்யும் எண்ணத்தையே மக்கள் கைவிடும்படி செய்யலாம், ரியல் எஸ்டேட் துறையில் தேசிய அளவில் தகவல்களை அரசே திரட்ட வேண்டும். மனை, வீடு, அடுக்ககம் ஆகியவற்றை விற்கும்போதே வரியைக் கழித்துக் கொள்வது (டி.டி.எஸ்.) நடைமுறையாக இருக்கவேண்டும் என்றும் பிரணாப்பின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications