ராமஜெயம் கொலையில் மர்ம முடிச்சுகள் அவிழ்வது எப்போது? தவிப்பில் உறவுகள்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து, அவர் கடத்தப்பட்ட நேரம் குறித்து அவரது குடும்பத்தினர் தவறான தகவல்களைக் கொடுத்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன.
அதே நேரத்தில் ராமஜெயம் வழக்கில் முக்கிய தொடர்புடைய நர்ஸ் ஒருவர் சிக்கிவிட்டதாகவும் இதனால் கொலையாளிகளை போலீசார் நெருங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அந்த நர்ஸை நள்ளிரவில் சந்திக்கப் போய்தான் ராமஜெயம் கொலையானார் என்றும்கூட கூறப்பட்டது.
ஆனால் விஷயமே வேறு என்பதுதான் பின்னர் தெரியவர ராமஜெயம் வழக்கு மீண்டும் கிடப்புக்குப் போனது.
விசாரணைக்குட்படுத்தப்பட்ட நர்ஸின் உறவினர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் நடந்த திருட்டு தொடர்பாக நர்சும் அவரது உறவினரும் புகார் கொடுக்க வந்ததால், அது குறித்து மட்டும்தான் விசாரணை நடத்தப்பட்டது என்றும், ராமஜெயம் குறித்து விசாரிக்கவில்லை என்றும் போலீசார் தலையால் அடிக்காத குறையாக மறுக்கின்றனர்.
ஆனாலும் அந்த நர்ஸுக்கு தனியார் மருத்துவமனையில் வேலைக்குப் பரிந்துரை செய்தவர் ராமஜெயம்தான் என்று கொக்கியும் போட்டு வைக்கின்றனர் போலீசார்.
அதே போல ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நேரம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும் போஸ்ட்மார்ட்டம் செய்த மாலை 3 மணி நிலவரப்படி, ராமஜெயம் இறந்து 8 முதல் 10 மணி நேரம் ஆகியிருக்கலாம் என டாக்டர்கள் கணித்துள்ளனர்.
இதனால் அவர் காலையில் தான் கொல்லப்பட்டுள்ளார், போலீஸ் தரப்பில் பரப்பிவிட்ட செய்தி மாதிரி முதல் நாள் இரவே கொல்லப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த கண்ணாமூச்சிக்கு விடைதான் எப்போது?












Click it and Unblock the Notifications