ஜெகன்மோகன் ரெட்டி எந்நேரத்திலும் கைது?: ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு அமல்- போலீஸ் குவிப்பு

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலநூறு கோடி ரூபாய் சொத்து குவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி என்பது சி.பி.ஐ. புகார். இந்த வழக்கில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. சி.பி.ஐ. முன்பு ஆஜரவாவதிலிருந்து விலக்கு கோரி நீதிமன்றப் படிக்கட்டுகளையும் தட்டிப்பார்த்தார் ஜெகன். பயனில்லை. இதைத் தொடர்ந்து மே 28-ந் தேதி சி.பி.ஐ. முன்பு ஜெகன் ஆஜராக உள்ளார்.
இதனிடையே தம்மை சி.பி.ஐ. மூலம் கைது செய்ய ஆந்திர மாநில அரசும் தெலுங்கு தேசம் கட்சியும் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றும்படியும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதிப்பார்த்தார். எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சி.பி.ஐ.யிடம் ஜெகன் ஆஜராவதற்கு முன்பாகவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற தகவல் பரவியதால் ஹைதரபாத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜெகனின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மே 29-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலை முன்னிட்டுத்தான் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications