மதுரையில் திருமணமாகி மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய தம்பதி
மதுரை: மதுரையில் திருமணமாகி மூன்று மாதமேயான தம்பதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு, அன்புவீதி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ்(23). அவர் மதுரை ரயில்வே பார்சல் நிலையத்தில் லோடுமேனாக இருந்தார். அவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சந்திரா(18) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சந்திராவின் பெரியப்பா மகள் மதுரை செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்த காசிப்பாண்டியின் மனைவி வசந்தி (22). நேற்று காலை சந்திராவின் அப்பா வசந்திக்கு போன் செய்து தனக்கு மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரைச் சென்று பார்த்துவிட்டு வருமாறும் தெரிவி்ததுள்ளார். இதையடுத்து வசந்தி தனது கணவருடன் சந்திராவின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. நெடுநேரமாகியும் யாரும் கதவைத் திறக்காததால் சந்தேமடைந்த வசந்தியும், அவரது கணவரும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பார்த்தால் சத்யராஜும், சந்திராவும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வசநதி உடனே இது குறித்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணவன், மனைவியின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியது குறித்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் சந்தோஷமாகத் தான் வாழ்ந்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.