வருமான வரித்துறை சோதனையா..?: அதிகாரிகள் உண்மையானவர்களா என்று பாருங்கள்!

திருவொற்றியூரையடுத்த விம்கோ நகரில் மளிகை கடை வைத்துள்ள கனகராஜ் என்பவரின் வீட்டுக்கு வந்த 4 பேர் போலி அடையாள அட்டைகளைக் காட்டி, தங்களை வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, சோதனை நடத்துவது போல நடித்து ரூ. 42 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர்.
போகும்போது ஒரு செல்போன் நம்பரை கொடுத்து அதில் தொடர்பு கொண்டு பேசி பணத்துக்கு கணக்குக் காட்டிவிட்டு திரும்பப் பெற்றுச் செல்லுமாறு கூறியிருந்தனர். ஆனால் அதுவும் போலியான எண் என்று தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இந் நிலையில் சென்னை வருமானவரித் துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கைகள் இவற்றை பின்பற்றி, வருமான வரித்துறை வருமான வரி சோதனைகளை மேற்கொள்கிறது. வர்த்தகம் அல்லது தொழில் நடக்கக் கூடிய இடங்களில் மட்டுமே வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகின்றன.
வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறாத குடியிருப்புகளில் (வீடுகள்) வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வதில்லை. மேலும் வருமான வரி சோதனைக்கு செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் கண்காணிப்பு அதிகாரிகளான இணை ஆணையர், ஆணையர், முதன்மை துணையர் ஆகியோரின் தொலைபேசி எண்களை கட்டாயம் வழங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபருக்கு (வரி செலுத்துபவர்) ஏதேனும் குறைகளோ அல்லது வேறு பிரச்சனைகளோ இருந்தால் மேற்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்படும் வருமானவரி சோதனைகளில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, அல்லது பிரச்சனைகள் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர்கள் (வருமான வரி செலுத்துபவர்) 044-2833 8757 என்ற எண்ணில் வருமான வரித்துறை அலுவலகத்தை (சென்னை) தொடர்பு கொண்டு, வந்திருப்பவர்கள் வருமான வரித்துறையினர் தானா? என்று உறுதி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications